பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 Sep 2020 4:36 AM GMT (Updated: 9 Sep 2020 4:36 AM GMT)

பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல்லடம்,

பல்லடத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் நகர தி.மு.க. பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், த.மா.கா. மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட செயலாளர் வாவிபாளையம் சோமசுந்தரம், மதசார்பற்ற ஜனதா தளம் மாவட்ட தலைவர் .பாலசுப்பிரமணியம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வக்கீல் ஈசன், பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்றுவரும்

முறைகேடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்லடம் பகுதியில் லஞ்சத்தை ஒழிப்பதற்கான இயக்கத்தை தொடங்கி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படியான ஆவணங்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்படாமல் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பல்லடம் சார்பதிவாளர் மீது இன்று (புதன்கிழமை) மாவட்ட பதிவாளரை சந்தித்து புகார் கொடுப்பது, அந்த புகார் மீது துறை ரீதியான விசாரணை ஒரு வார காலத்திற்குள் நடத்த வேண்டும். இல்லை என்றால் பல்லடம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து பல்லடம் சார்பதிவாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினசரிசுமார் 70 முதல் 75 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 1,480 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் அரசுக்கு ரூ.6 கோடியே 50 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. அதே போல் கடந்த மாதம் 1,186 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.4கோடியே 61 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இந்த மாதம் (செப்டம்பர்) நேற்று வரை 520 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு ரூ.1 கோடியே 77 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. ஒரு ஆவணம் பதிவு செய்ய குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகிறது. ஆவணங்களை ஆய்வு செய்து துரிதமாக பதிவு செய்து ஆவணங்கள் வழங்கி வருகிறோம். எங்கள் அலுவலகத்தில் பணிபுரிவோர் நான் உள்பட யாரும் யாரிடமும் லஞ்சம் பெறுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story