மராட்டியத்தில் ஒரேநாளில் 23,816 பேருக்கு கொரோனா மேலும் 325 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் ஒரேநாளில் 23,816 பேருக்கு கொரோனா மேலும் 325 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Sep 2020 7:55 PM GMT (Updated: 9 Sep 2020 7:55 PM GMT)

மராட்டியத்தில் ஒரே நாளில் 23 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 325 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் நாளுக்கு, நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த வகையில் நேற்று ஒரே நாளில் மராட்டியத்தில் 23 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 67 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 325 பேர் உயிரிழந்தவர். அவர்களுடன் சேர்ந்து மராட்டியத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 787 ஆக அதிகரித்தது.

மேலும் நேற்று 13 ஆயிரத்து 906 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டனர். இத்துடன் சேர்ந்து 8 லட்சத்து 86 ஆயிரத்து 462 பேர் குணமடைந்துள்ளனர்.

தலைநகர் மும்பையில்...

தலைநகர் மும்பையிலும் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று மட்டும் 2 ஆயிரத்து 227 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 744 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று பலியான 43 பேரையும் சேர்ந்து சுமார் 7 ஆயிரத்து 985 பேர் உயிரிழந்துள்ளனர்.

மராட்டியத்தில் நோயிலிருந்து குணமானவர்கள் விகிதம் 70.96 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

இதுவரை மாநிலமும் முழுவதும் 48 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.81 சதவீதத்தினருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

தற்போது சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் புனேயில் மட்டும் 65 ஆயிரத்து 361 பேர் சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story