சட்டவிரோதமாக கட்டியதாக கூறி நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பு மும்பை மாநகராட்சி அதிரடி


சட்டவிரோதமாக கட்டியதாக கூறி நடிகை கங்கனா ரணாவத் பங்களா இடிப்பு மும்பை மாநகராட்சி அதிரடி
x
தினத்தந்தி 9 Sep 2020 8:14 PM GMT (Updated: 9 Sep 2020 8:14 PM GMT)

நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டின் பல பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக கூறி மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது. இதற்கிடையே பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் கங்கனா ரணாவத் நேற்று மும்பை திரும்பினார்.

மும்பை,

இந்தி திரையுலகில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரித்த விதம் குறித்து மராட்டிய அரசு மற்றும் மும்பை போலீசார் மீது 33 வயது பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

நடிகை கங்கனா மோதல்

இந்தி திரையுலகத்தில் போதைப்பொருள் பழக்கம் நிலவுவதாகவும் பகிரங்கமாக கூறினார். மேலும் மும்பை பாதுகாப்பற்ற நகரமாக இருப்பதாக கூறிய நடிகை கங்கனா, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், சினிமாவில் வரும் மாபியாக்களை விட மும்பை போலீசாரை பார்த்து பயப்படுவதாகவும் சர்ச்சை கருத்தை கூறி நடிகை கங்கனா பரபரப்பை ஏற்படுத்தினார்.

சொந்த ஊரான இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்தபடி மும்பை நகர் மற்றும் மும்பை போலீசாரை பற்றி குறை கூறிய நடிகை கங்கனாவுக்கு ஆளும் கட்சியான சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணர்ந்தால், இங்கே வராதீர்கள் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுக்க, 9-ந்தேதி (நேற்று) மும்பை திரும்புவேன் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கங்கனா சவால் விடுத்தார்.

இடித்து தள்ளப்பட்டது

இந்த மோதலை அடுத்து மும்பை பாந்திரா பாலிஹில் பகுதியில் உள்ள நடிகை கங்கனா பங்களா வீட்டில் சட்டவிரோதமாக புதுப்பிப்பு பணிகள் நடந்து இருப்பதாக நேற்று முன்தினம் காலை மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. 24 மணி நேரத்தில் பதிலளிக்க கெடுவும் விதித்தது. அதன்படி கங்கனா பதிலளிக்கவில்லை என்பதால், மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும் நேற்று காலை கங்கனாவின் பங்களா வீட்டுக்கு சென்றனர். அங்கு சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படுவது தொடர்பாக நோட்டீஸ் ஒட்டினர்.

உடனடியாக பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. அவரது பங்களாவில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படும் பகுதிகளை இடித்து தள்ளினர்.

அகற்றப்பட்ட பகுதிகள் எவை?

பங்களாவின் கீழ்தளம் மற்றும் முதல் மாடியில் உள்ள பல பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. அதாவது கழிவறை உள்ளிட்ட கீழ் தளத்தில் உள்ள கட்டுமானங்கள், முதல் தளத்தில் நீட்டிக்கப்பட்ட பால்கனி, அலுவலக கூட்ட அரங்கம் ஆகியவை இடிக்கப்பட்டதாக தெரியவந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய இடிப்பு பணி மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. இந்த பணியில் 30 மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இடிப்பு பணியின் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய கங்கனா ரணாவத்தின் ஆதரவாளர்கள் 15 பேரை போலீசார் பிடித்து சென்றனர். இதில் பெண்களும் அடங்குவர்.

இந்த அதிரடி நடவடிக்கைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஐகோர்ட்டு தடை

இதற்கிடையே நடிகை கங்கனா மும்பை ஐகோர்ட்டில் தனது பங்களா வீட்டில் இடிப்பு பணியை மேற்கொள்ள தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஒருபுறம் மாநகராட்சி இடிப்பு பணியை மேற்கொண்டு இருந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் கதாவாலா, சக்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி மேற்கொள்ளும் இடிப்பு பணிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வீட்டில் அதன் உரிமையாளர் இல்லாதபோது, எப்படி உள்ளே சென்று இடிப்பு பணியில் ஈடுபடலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் வீட்டின் உரிமையாளர் வெளிமாநிலத்தில் இருக்கும்போது அவருக்கு 24 மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுத்தது ஏன்? என்றும் கேட்டனர். இதைத் தொடர்ந்து கங்கனாவின் மனு மீது மும்பை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை இன்றைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மும்பை திரும்பிய கங்கனா

மும்பையில் உள்ள பங்களா வீட்டில் மாநகராட்சி இடிப்பு பணியை செய்து கொண்டு இருந்த நிலையிலும், சிவசேனாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் நடிகை கங்கனா தனது சொந்த ஊரில் இருந்து மும்பை திரும்பினார். பிற்பகல் 2.30 மணியளவில் அவர் மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவசேனாவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இந்திய குடியரசு கட்சி (ஏ) தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோளை ஏற்று அக்கட்சியினர் விமான நிலையத்தில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்க திரண்டனர்.

வீட்டுக்கு சென்றார்

சிவசேனா மிரட்டலை தொடர்ந்து நடிகை கங்கனாவுக்கு “ஒய் பிளஸ்” பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியிருந்தது. அதன்படி ஆயுதம் தாங்கிய கமாண்டோ வீரர்கள் கங்கனாவை பாதுகாப்பு வளையம் அமைத்து மும்பைக்கு அழைத்து வந்தனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடாத வண்ணம் மும்பை போலீசாரும் பலத்த பாதுகாப்பு வழங்கினர். நடிகை கங்கனா ரணாவத் தனது வீடு திரும்பியதும், வீட்டின் பல பகுதிகள் இடிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீடியோ பதிவை வெளியிட்டார்

Next Story