அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை நாராயணசாமி எச்சரிக்கை


அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 Sep 2020 9:21 PM GMT (Updated: 9 Sep 2020 9:21 PM GMT)

தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு நடத்திய முதல்-அமைச்சர் நாராயணசாமி அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அலுவலகத்தில் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

ஊரடங்கு தளர்வினை தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் புதுவையில் அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு அரசு அலுவலகங்களில் சரியான நேரத்தில் ஊழியர்கள் பணிக்கு வருவதில்லை என்று புகார்கள் வந்தன. குறிப்பாக தலைமை செயலகத்தில் ஊழியர்கள் பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணி அளவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்று பார்வையிட்டார். அப்போது பெரும்பாலான பிரிவுகளில் ஊழியர்களின் இருக்கைகள் காலியாகவே இருந்தன.

பணிக்கு வரவில்லை

இதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் அஸ்வனிகுமாரை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் உள்ள அரசு அலுவலகங்களில் 100 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல மாதங்களாக கொரோனா காரணமாக மக்கள் நலப் பணிகள் முடங்கியுள்ளன. செப்டம்பர் 1-ந்தேதி முதல் அனைத்து அரசு ஊழியர்களையும் பணி செய்ய உத்தரவிட்டு இருந்தோம்.

இந்தநிலையில் தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினேன். அப்போது 5 அரசு செயலாளர்கள் உள்பட ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளரை சந்தித்து பேசி உள்ளேன். செயலாளர்கள் பணியில் முனைப்பாக இருந்தால்தான் மற்ற பணியாளர்கள் காலத்தோடு அலுவலகம் வருவார்கள்.

வருவாய் இழப்பு

இதுதொடர்பாக தலைமை செயலாளரிடம் பேசி கண்காணிக்க கூறியுள்ளேன். ஊரடங்கு காரணமாக வெகுவாக மாநிலத்தின் வருவாய் குறைந்துள்ளது. சராசரியாக 40 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாயை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நமது வருவாயில் பெரும்பகுதி வணிகவரி, கலால், பத்திரப்பதிவு, போக்குவரத்து துறைகள் மூலம் வருகிறது.

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியில் நமக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ரூ.700 கோடியை கடந்த 5 மாதமாக தரவில்லை. அவர்கள் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கி அதை 2 வருடத்தில் கட்ட சொல்கிறார்கள். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி இழப்பினை ஈடுசெய்ய மத்திய அரசு தவறுகிறது. கொரோனா நிவாரணப் பணிகளை நாம் பேரிடர் நிதியில் இருந்தும், முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்தும் எடுத்து செலவிடுகிறோம்.

கடும் நடவடிக்கை

தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு செலவாகும் தொகையையும் வழங்குகிறோம். விரைவில் கொரோனா பரிசோதனைகளை 3 ஆயிரமாக உயர்த்த உள்ளோம். கொசு தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் 500 சோதனைகளை நடத்த உள்ளோம்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வரவேண்டும். அவ்வாறு வராவிட்டால் அவர்கள் மீது துறைத்தலைவர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story