கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி


கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 9 Sep 2020 11:08 PM GMT (Updated: 9 Sep 2020 11:08 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே விஷம் கொடுத்து மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணியன் (வயது 28). பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி பரமேஸ்வரி (25). இவர்களுக்கு கரிஷ்னா (9), ஹரிணி (1½) என்ற 2 மகள்களும், பிரவீன் (7) என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் கரிஷ்னா , அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். குடும்ப செலவுக்காக பரமேஸ்வரி மகளிர் சுயஉதவி குழுவில் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

இந்த கடனுக்கான தவணை கட்டுவதற்காக அவர் தனது கணவர் சுப்பிரமணியனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை. வேலைக்கு சென்று வந்தவுடன் தருகிறேன். அதன்பின்னர் தவணை கட்டி கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து சுப்பிரமணியன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட பரமேஸ்வரி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து கரிஷ்னாவுக்கு கொடுத்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த விஷத்தை பரமேஸ்வரியும் குடித்தார். விஷத்தை குடித்த சிறிது நேரத்தில் கரிஷ்னாவுக்கு வாந்தி ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவளிடம் விசாரித்தனர். அப்போது அவள் நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் தெரிவித்தாள். இதையடுத்து தாய், மகள் 2 பேரையும் அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கரிஷ்னா பரிதாபமாக இறந்தாள். பரமேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், பரமேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீனும், ஹரிணியும் அருகில் உள்ள அவர்களுடைய பெரியம்மா வீட்டுக்கு சென்றதால், அவர்கள் தப்பினர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story