கொரோனா நோயாளிகளுக்கு வாசனை நுகரும் திறனை மீட்க ஓம பொட்டலம்


கொரோனா நோயாளிகளுக்கு வாசனை நுகரும் திறனை மீட்க ஓம பொட்டலம்
x

திருப்பூர் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வாசனை நுகரும் திறனை மீட்க ஓம பொட்டலம் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் தாக்குதலில் குறிப்பிடத்தக்க அறிகுறியாக நுகரும் திறன் இழப்பு, நாக்கின் சுவை அறியும் திறன் இன்மை போன்றவையாகும். கொரோனா பாதிப்புக்கு உள்ளான 80 சதவீதம் பேர் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலானோருக்கு வாசனை அறியும் நுகர்வு திறன் மற்றும் சுவை அறியும் திறன் இன்றி அவதிப்படுகிறார்கள்.

அவ்வாறு வாசனை திறன் இழப்பு மற்றும் சுவை அறியும் திறன் இன்றி அவதிப்படுபவர்களுக்கு சித்த மருத்துவ சிகிச்சை கைகொடுக்கிறது. திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் செயல்பட்டு வரும் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் இந்த திறனை மீட்டெடுப்பதற்காக ஓம பொடி பொட்டலம் வழங்கி அதை அடிக்கடி நுகர்ந்து வாசனை பிடிக்க சொல்லி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு தொடர்ந்து 5 நாட்கள் நுகர்ந்து ஓம பொடி பொட்டலத்தின் வாசனையை பிடித்தவர்களுக்கு மூக்கின் நுகரும் திறன் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது என்பது தெரியவந்து உள்ளது.

இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் விருப்பத்தின்படி சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கடந்த மாதம் முதல் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி காலையில் ஒருமுறை கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. அத்துடன் அமுக்கரா சூரண மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், திரிபலாசூரணம், ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

மேலும் நுகரும் திறனை இழந்தவர்களுக்கு அதனை மீட்கும் விதமாக ஓம பொடி பொட்டலம் வழங்கப்படுகிறது. இந்த பொடியை 5 கிராம் அளவில் துணியில் பொட்டலமாக முடிந்து வைத்து தேவைப்படுவோருக்கு வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பொட்டலத்தை மூக்கில் வைத்து நுகர்ந்தால் விரைவில் நுகரும் திறன் மீட்கப்படும். அத்துடன் சுவாச பாதையில் உள்ள வைரஸ் கிருமிகள் அழிக்கப்படுவதோடு, அடைப்புகள் சீரடைந்து ஆக்சிஜன் அளவும் சீரடையும். திருப்பூர் மாவட்டத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் இதுவரை 63 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 117 பேர் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஓம பொடி பொட்டலம் தயாரிக்கும் முறை குறித்து சித்த மருத்துவ உதவி அதிகாரி ஜெயந்தி கூறியதாவது:-

சித்த மருத்துவத்தில் உள்ள 32 புற மருந்துகளில் ஒன்று தான் ஓம பொடி. அரைகிலோ ஓமத்தை ஒரு கவுளி (100) வெற்றிலையை அரைத்து பிழிந்த சாற்றில் ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். பின்னர் அதை நிழலில் காயவைத்து 50 கிராம் கிராம்பு, 25 கிராம் பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஓமத்தை நன்கு அரைக்க வேண்டும்.

இதையடுத்து பொடியான பிறகு 5 கிராம் அளவில் ஒரு வெள்ளை துணியில் பொட்டலம் போன்று முடிந்து வைத்துவிடவேண்டும். பின்னர் அந்த பொட்டலத்தை கொரோனா தொற்று ஏற்பட்டு, நுகரும் திறன் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மூக்கில் வைத்து நுகர்ந்தால் சில நாட்களிலேயே நுகரும் தன்மை மீட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story