வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு வெட்டு கொலை செய்ய வந்த நபர் இல்லாததால் மர்மநபர்கள் ஆத்திரம்


வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு வெட்டு கொலை செய்ய வந்த நபர் இல்லாததால் மர்மநபர்கள் ஆத்திரம்
x
தினத்தந்தி 10 Sep 2020 10:05 PM GMT (Updated: 10 Sep 2020 10:05 PM GMT)

தாங்கள் கொலை செய்ய வந்த நபர் இல்லாததால் ஆத்திரத்தில் வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த 10-ம் வகுப்பு மாணவரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மகன் தியாகு(வயது 15). 10-ம் வகுப்பு மாணவரான இவர், நேற்று முன்தினம் இரவு தனது எதிர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் சென்றனர். அவர்கள் அந்த தெருவின் கடைசி வரை சென்றுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது முன்னால் வந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்த நபர், திடீரென தன்னிடம் இருந்த கத்தியால் அங்கு அமர்ந்து இருந்த தியாகுவை வெட்டினார்.

அவருக்கு பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவரும் கீழே இறங்கி தியாகுவை கத்தியால் வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தியாகு, அலறியடித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி வீட்டுக்குள் ஓடி கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அந்த நபர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

கொலை செய்ய வந்தனர்

மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தியாகுவை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில், மாணவரை கத்தியால் வெட்டிய கும்பலை சேர்ந்த ஒருவர் ரவுடி புறா மணி என்பதும், முன்விரோதம் காரணமாக வேறு ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு அங்கு வந்ததாகவும், ஆனால் அவர் இல்லாததால் ஆத்திரத்தில் தியாகுவை வெட்டியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story