கோவில்பட்டி யூனியனில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


கோவில்பட்டி யூனியனில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 12 Sep 2020 6:28 PM GMT (Updated: 12 Sep 2020 6:28 PM GMT)

கோவில்பட்டி யூனியனில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை, அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி யூனியன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் திறப்பு, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

சத்திரப்பட்டி ஊராட்சி திருமலைநகரில் ரூ.8.43 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, இடைசெவல் ஊராட்சி புதிய ஊராட்சி அலுவலக தெருவில் ரூ.8.55 லட்சத்தில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, முடுக்குமீண்டான்பட்டி ஊராட்சி தெற்கு தெருவில் ரூ.3 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி, பெருமாள் கோவில் தெருவில் ரூ.2.29 லட்சத்தில் வாறுகால் அமைக்கும் பணி ஆகியவற்றை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அம்மா இருசக்கர வாகனம்

நாலாட்டின்புதூர் ஊராட்சி ஆண்டாள் நகர் முதல் பட்டறை பேருந்து நிறுத்தம் வரை ரூ.44 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, விஸ்வநாத நகர் முதல் வி.பி.சிந்தன் நகர் வரை ரூ.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, இனாம் மணியாச்சி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகம், லட்சுமிபுரம் மேலக்காலனியில் ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, மந்தித்தோப்பு ஊராட்சியில் ரூ.9.08 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதேபோல், மந்தித்தோப்பு ஊராட்சி குருமலை விலக்கில் ரூ.3.50 லட்சத்தில் பயணியர் நிழற்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். இனாம் மணியாச்சி மற்றும் இ.பி.காலனியில் 758 வீடுகளுக்கு ரூ.49.10 லட்சத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.55.75 லட்சத்தில் 20 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சின்னப்பன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துணை தலைவர் பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் சந்திரன், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, இனாம் மணியாச்சி பஞ்சாயத்து தலைவி ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story