நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 12:42 AM GMT (Updated: 13 Sep 2020 12:42 AM GMT)

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்த சேர்க்கை இம்மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும். அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீட் தேர்வு

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. நீட் தேர்்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு 238 மையங்களில் நடக்கிறது. இதில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் தேர்வை எழுத உள்ளனர். பள்ளிகள் திறப்பு தற்போது இல்லை.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை 7 ஆயிரத்து 500 பேருக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசு மக்கள் பணிக்காக வேகமாக செயல்பட்டு வருகிறது. கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ச் டூ ஆர்ச் வரை புதிய தார்சாலை அமைக்கப்படும். கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

முன்னதாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 126 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, நத்தம், பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், கொரோனா காலத்தில் தன்னார்வத்துடன் சிறப்பாக பணிபுரிந்த தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ. ஜெயராமன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், தாசில்தார் சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story