மராட்டியத்தில் ஒரே நாளில் 416 பேர் கொரோனாவுக்கு பலி


மராட்டியத்தில் ஒரே நாளில் 416 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 13 Sep 2020 8:51 PM GMT (Updated: 13 Sep 2020 8:51 PM GMT)

மராட்டியத்தில் ஒரேநாளில் 416 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்போது மாநிலத்தின் ஊரக பகுதிகளிலும் தொற்று பரவல் வேகம் எடுத்து உள்ளது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 22 ஆயிரத்து 543 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 60 ஆயிரத்து 308 ஆகி உள்ளது.

இதில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 61 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 90 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் நோய் பாதிப்பில் இருந்து குணமானவர்கள் சதவீதம் 69.8 ஆக குறைந்து உள்ளது.

416 பேர் பலி

இதற்கிடையே மாநிலத்தில் புதிதாக 416 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 531 ஆக உள்ளது.

புனேயில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் நேற்று புனே நகரில் 2 ஆயிரத்து 294 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல நாக்பூரில் 1,534 பேருக்கும், பிம்பிரி சிஞ்வட்டில் 1,004 பேருக்கும், நாசிக்கில் 713 பேருக்கும், சாங்கிலியில் 562 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் தற்போது 16 லட்சத்து 83 ஆயிரத்து 770 பேர் வீடுகளிலும், 37 ஆயிரத்து 294 பேர் தனிமை மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Story