போலீஸ் காவல் நிறைவு பெறுவதால் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கோர்ட்டில் இன்று விசாரணை


போலீஸ் காவல் நிறைவு பெறுவதால் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கோர்ட்டில் இன்று விசாரணை
x

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவல் இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கோர்ட்டில் நடைபெற உள்ளது. அவர்களுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்றும் எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்களான டெல்லியை சேர்ந்த வீரேன் கண்ணா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, பிரதீக் ஷெட்டி, நயாஷ், பிரசாந்த் ரங்கா, ஆதித்யா அகர்வால், வைபவ் ஷெட்டி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தடயத்தை அழிக்க முயற்சி

இந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 11-ந் தேதி ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 6 பேரையும் பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தி இருந்தார்கள். அப்போது போலீஸ் காவலில் இருந்த போது 2 நடிகைகளும் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், அவர்களிடம் கூடுதலாக 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதிக்கும்படி நீதிபதியிடம், போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் அனுமதி கேட்டார். இதையடுத்து 14-ந் தேதி(அதாவது இன்று) வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கி இருந்தார்.

அதன்படி நடிகைகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு போலீசார் அழைத்து சென்று அங்கு அவர்களுக்கு சிறுநீர், தலைமுடி சோதனை நடத்தினர். அப்போது நடிகை ராகிணி திவேதி சிறுநீருடன் தண்ணீரை கலந்து தடயத்தை அழிக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அவர் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.

தீவிர விசாரணை

போதைப்பொருள் வழக்கில் கடந்த 4-ந் தேதி கைதான ராகிணி திவேதியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும் அவர் விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அதுபோல நடிகை சஞ்சனா கல்ராணியும் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தரவில்லை.

விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்காமல் தப்பி விடலாம் என்று 2 பேரும் நினைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுடன்(திங்கட்கிழமை) 2 பேரின் போலீஸ் காவலும் நிறைவு பெற உள்ள நிலையில், சித்தாப்புராவில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருந்து ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மடிவாளாவில் உள்ள தடய அறிவியல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். அங்கு வைத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். ஆனால் அங்கேயும் வைத்து அவர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜாமீன் கிடைக்குமா?

இந்த நிலையில் இன்று ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். நடிகைகள் 2 பேரும் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத போதும், அவர்களின் நண்பர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து போலீசார் மீண்டும் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால் அவர்களை மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்ப வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளிக்காத பட்சத்தில், 2 பேரும் நீதிமன்ற காவலுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று நடக்கிறது. இந்த விசாரணையின் முடிவில் தான் நடிகைகள் 2 பேருக்கும் ஜாமீன் கிடைக்குமா? போலீஸ் காவலுக்கு செல்வார்களா? அல்லது சிறைவாசம் அனுபவிக்க செல்வார்களா? என்பது தெரியவரும்.

Next Story