பெலகாவியில் சம்பவம் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர் பரபரப்பு - போலீஸ் விசாரணை


பெலகாவியில் சம்பவம் விமான நிலையத்திற்கு ஏ.கே.-47 துப்பாக்கியுடன் வந்த ராணுவ வீரர் பரபரப்பு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 Sep 2020 10:01 PM GMT (Updated: 13 Sep 2020 10:01 PM GMT)

பெலகாவியில் உள்ள விமான நிலையத்திற்கு நேற்று ராணுவ வீரர் ஒருவர் ஏ.கே. - 47 துப்பாக்கியுடன் வந்தார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ராணுவ வீரரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெலகாவி,

பெலகாவியை சேர்ந்தவர் நாயக் சுபேதார். ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் நாயக் சுபேதார் பெலகாவிக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் விடுமுறை முடிந்ததையடுத்து பணிக்கு செல்வதற்காக நாயக் சுபேதார், பெலகாவியில் உள்ள சம்ப்ரா விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நாயக் சுபேதாரை சோதனை நடத்தினர். அப்போது அவர் குண்டுகளுடன் கூடிய ஏ.கே-47 ரக துப்பாக்கியை எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பறிமுதல்

இதையடுத்து அந்த துப்பாக்கியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் துப்பாக்கியை இந்திய சிறிய ஆயுத அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். மேலும் ராணுவ வீரர் நாயக் சுபேதாரையும், பெலகாவியில் உள்ள ராணுவ மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு வைத்து நாயக் சுபேதாரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக மரிகாலா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story