புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று


புதுவையில் கொரோனாவுக்கு 15 பேர் பலி புதிதாக 388 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 Sep 2020 10:32 PM GMT (Updated: 13 Sep 2020 10:32 PM GMT)

புதுவையில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 24 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 388 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 342 பேர் குணமடைந்து உள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 99 ஆயிரத்து 480 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 77 ஆயிரத்து 60 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 19 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 856 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,696 ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 160 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர்.

15 பேர் உயிரிழப்பு

புதுவையில் இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ள னர். அவர்களில் 331 பேர் புதுச் சேரியை சேர்ந்தவர்கள். 20 பேர் காரைக்காலையும், 34 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது அரசு ஆஸ்பத்திரியில் அரியாங்குப்பம் மணவெளி ரோட்டை சேர்ந்த 54 வயது பெண்ணும், கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சஞ்சய் காந்திநகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த 49 வயது பெண்ணும், நெட்டப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த 76 வயது மூதாட்டியும், பூமியான்பேட்டை வள்ளலார் நகரை சேர்ந்த 83 வயது மூதாட்டியும், புதுசாரம் வடக்கு தெருவை சேர்ந்த 52 வயது ஆணும், அரியாங்குப்பம் சுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்த 64 வயது ஆணும் பலியாகி உள்ளனர்.

ஜிப்மரில் அரியாங்குப்பத்தை சேர்ந்த 52 வயது ஆணும், மடுகரையை சேர்ந்த 48 வயது பெண்ணும், ரெயின்போ நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்த 81 வயது முதியவரும், புதுசாரம் தென்றல் நகரை சேர்ந்த 70 வயது முதியவரும், ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்த 67 வயது முதியவரும் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு 1.94 சதவீதம்

தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முத்திரையர்பாளையம் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவரும், லாஸ்பேட்டை மகாவீர் நகர் பகுதியை சேர்ந்த 64 வயது பெண்ணும், ரெட்டியார்பாளையம் எம்.ஏ.எஸ். காலனியை சேர்ந்த 80 வயது முதியவரும், முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரும் பலியாகியுள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைவது 73.56 சதவீதமாகவும் உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story