நெல்லையில் டாக்டர், போலீஸ்காரர்கள் உள்பட 126 பேருக்கு கொரோனா தூத்துக்குடி, தென்காசியில் 73 பேர் பாதிப்பு


நெல்லையில் டாக்டர், போலீஸ்காரர்கள் உள்பட 126 பேருக்கு கொரோனா தூத்துக்குடி, தென்காசியில் 73 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2020 11:40 PM GMT (Updated: 13 Sep 2020 11:40 PM GMT)

நெல்லையில் டாக்டர், போலீஸ்காரர்கள் உள்பட 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று 126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 43 பேர் ஆவர். இதுதவிர அம்பை, களக்காடு, சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்த ஒரு டாக்டருக்கும், களக்காட்டை சேர்ந்த ஒரு டாக்டருக்கும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒரு டாக்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 3 டாக்டர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கூடங்குளம் பகுதியில் உள்ள 2 போலீஸ்காரர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 131-ஆக உயர்ந்து உள்ளது.

ராதாபுரம் தொகுதி செந்திகுளத்தை சேர்ந்த 81 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள், தென்காசி, செங்கோட்டை, கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 260-ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 300 ஆக அதிகரித்தது. நேற்று 62 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 500 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 681 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உள்ளது.

Next Story