8 இடங்களில் சிறப்பு முகாம்: 376 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை


8 இடங்களில் சிறப்பு முகாம்: 376 புகார் மனுக்களுக்கு உடனடி தீர்வு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Sep 2020 11:43 PM GMT (Updated: 13 Sep 2020 11:43 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் புகார் மனுக்களுக்கான சிறப்பு தீர்வு முகாம் 8 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 376 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார் மனுக்கள் கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படாத நிலையில் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் 8 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தூத்துக்குடி ராஜ் மகாலிலும், தூத்துக்குடி ஊரகத்துக்கு புதுக்கோட்டை சத்யா மகாலிலும், ஸ்ரீவைகுண்டத்துக்கு குமரகுருபரர் நடுநிலைப்பள்ளியிலும், திருச்செந்தூருக்கு குறிஞ்சி மகாலிலும், சாத்தான்குளத்துக்கு டி.டி.டி.ஏ. புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியிலும், மணியாச்சிக்கு பசுவந்தனையில் உள்ள துர்கா மகாலிலும், விளாத்திகுளத்துக்கு பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியிலும், கோவில்பட்டிக்கு வைஸ்யா மேல் நிலைப்பள்ளி ஆகிய 8 இடங்களில் முகாம் நடந்தது.

தீர்வு

தூத்துக்குடியில் நடந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். இந்த முகாமுக்கு, ஏற்கனவே புகார் மனு கொடுத்து நிலுவையில் உள்ள மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் வரவழைக்கப்பட்டனர். இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி மனுக்கள் மீது இறுதி முடிவு எடுத்து தீர்வு கண்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 580 மனுக்கள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 376 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த தீர்வு முகாம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 376 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. இதனால் மனுதாரர்கள் மனநிம்மதியுடன் சென்றனர். இந்த முகாம் மாதம் தோறும் அல்லது 2 மாதத்துக்கு ஒருமுறை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் புகார்தாரர்களுக்கு தெரியாமல், நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைப்பதாக புகார்கள் கூறப்படுகிறது. வழக்குகளில் முறையான விசாரணை செய்யப்பட்டு வருகிறது. வழக்கில் மேல்நடவடிக்கை நிறுத்தப்படும் போது, புகார்தாரர்கள் கையெழுத்து இல்லாமல் வழக்கு முடித்து வைக்க முடியாது. அந்த வழக்கின் மனுதாரருக்கு அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படும். அவ்வாறு போலீசார், புகார்தாரர்களுக்கு தெரியாமல் ஏதேனும் வழக்கை முடித்து வைத்து இருந்தால், புகார் தெரிவித்தால், வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆயிரவைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமில் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், கொப்பம்பட்டி, கழுகுமலை, கயத்தாறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் நடத்தப்பட்டது.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதேசன், முத்து, பத்மாவதி, சுகாதேவி, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட கூடுதல் துணை சூப்பிரண்டு கோபி ஆய்வு செய்தார். இதில், சுமார் 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Next Story