ஈரோட்டில் பயங்கரம் சுத்தியலால் அடித்து வாலிபர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணன் கைது


ஈரோட்டில் பயங்கரம் சுத்தியலால் அடித்து வாலிபர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணன் கைது
x
தினத்தந்தி 14 Sep 2020 12:03 AM GMT (Updated: 14 Sep 2020 12:03 AM GMT)

ஈரோட்டில் சுத்தியலால் அடித்து வாலிபரை படுகொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் கமலாநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 59). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணியம்மா (52). இவர்களுக்கு காளியப்பன் (33), சங்கர் (29), தினேஷ் (20) ஆகிய 3 மகன்களும், காயத்திரி (27) என்ற மகளும் உள்ளனர். இதில் சங்கர் தனது மனைவி தீபாவுடன் வண்டியூரான்கோவில் பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு தேவசேனா என்கிற ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தினேசுக்கு திருமணமாகவில்லை. சங்கருக்கு மது குடிக் கும் பழக்கம் உண்டு. அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபா தனது கணவர் சங்கரை பிரிந்து சென்று விட்டார்.

கொலை

இந்தநிலையில் சங்கர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனோகரனும், தினேசும் சங்கரை கண்டித்து உள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது மனோகரனும், தினேசும் சங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கீழே விழுந்து காயம் அடைந்த சங்கர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவர் நேற்று காலை வீட்டுக்கு சென்றார். அப்போது தினேஷ் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் சங்கர் ஆத்திரம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்த சுத்தியலை எடுத்து, தனது தம்பி என்றும் பாராமல் தினேசின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த தினேஷ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

கைது

இந்த சத்தம் கேட்டதும், வெளியில் நின்றிருந்த மனோகரன் ஓடோடி வீட்டுக்குள் சென்றார். அங்கு தினேஷ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார். அதற்குள் சங்கர் அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடினார்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது.

இதைத்தொடர்ந்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். தினேசின் உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையான தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தப்பி ஓடிய சங்கர் கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஈரோட்டில் மது குடிப்பதை கண்டித்த தம்பியை அண்ணனே சுத்தியால் அடித்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story