தேவையூர் அருகே, மொபட் மீது கார் மோதி பள்ளி மாணவர் சாவு - அண்ணன் படுகாயம்


தேவையூர் அருகே, மொபட் மீது கார் மோதி பள்ளி மாணவர் சாவு - அண்ணன் படுகாயம்
x
தினத்தந்தி 13 Sep 2020 10:30 PM GMT (Updated: 14 Sep 2020 2:36 AM GMT)

தேவையூர் அருகே மொபட் மீது கார் மோதியதில் பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய அண்ணன் படுகாயமடைந்தார்.

மங்களமேடு,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன்கள் கலைவாணன்(வயது 18), ராமன்(15). இதில் கலைவாணன், ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த ராமன், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர்கள் 2 பேரும் ஒரு மொபட்டில் சொந்த வேலையாக பெரம்பலூர் வந்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

தேவையூர் அணுகு சாலையை தாண்டி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியபோது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், கலைவாணனின் மொபட் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலைவாணன், ராமன் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ராமன் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story