திருப்பூரில், கொரோனாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பலி


திருப்பூரில், கொரோனாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பலி
x
தினத்தந்தி 14 Sep 2020 6:15 AM GMT (Updated: 14 Sep 2020 6:15 AM GMT)

திருப்பூரில், கோரோனாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பலியானார்.

திருப்பூர், 

திருப்பூர் குமார்நகர் முருங்கப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 69). இவர் 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை திருப்பூர் தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. வாக இருந்தார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் அவரது மனைவி சிகிச்சை பெற்று கொரோனா தொற்று இல்லாத நிலையில் வீடு திரும்பினார்.

இதற்கிடையே முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் மட்டும் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதற்கிடையே அவரது மறைவுக்கு திருப்பூர் தொழில்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் இரங்கல் பதிவிட்டுள்ளனர். பலியான தங்கவேலுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Next Story