வல்லநாடு அருகே கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது


வல்லநாடு அருகே கணவன்- மனைவிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2020 10:15 PM GMT (Updated: 14 Sep 2020 6:21 PM GMT)

வல்லநாடு அருகே கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம்,

வல்லநாடு நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (வயது 40). இவர் அதே ஊரில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஐயம்மாள் (32). இவர்களது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் ராமசுப்பிரமணியன் தந்தை இசக்கி, தாய் பிரமு ஆகியோருக்கு தனி வீடு கட்ட முடிவு செய்து பின்புறம் உள்ள நிலத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்து பணி நடந்து வருகிறது. அஸ்திவாரம் அருகே ராமசுப்பிரமணியன் கற்களை கொட்டியுள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த வட வல்லநாடு பாறைகாடு சிதம்பர நகர் பைப்லைன் காலனி தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் தம்பான் (21) என்பவர் அதனை கண்டித்து ராமசுப்பிரமணியனிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து தம்பான் சென்றுவிட்டார். அவர் சிறிது நேரம் கழித்து மீண்டும் ராமசுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தகராறு முற்றவே தம்பான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமசுப்பிரமணியனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ராமசுப்பிரமணியன் இடது கை மணிக்கட்டு, விரல் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராமசுப்பிரமணியன் மனைவி அய்யம்மாள் இதனை தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவருக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. இதனால் காயம் அடைந்த ஐயம்மாள் நிலை தடுமாறி மயங்கி விழுந்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய தம்பானை கைது செய்தார். பின்னர் அவரை போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைத்தனர்.

Next Story