குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்


குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Sep 2020 10:45 PM GMT (Updated: 14 Sep 2020 7:06 PM GMT)

தென்காசியில் குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.

தென்காசி,

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு தென்காசி நகராட்சி 9-வது வார்டு நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதற்கான முகாமினை தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றிலும் மற்றும் வீடு வீடாகச் சென்று சுகாதார பணியாளர்கள் மூலம் 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 60 ஆயிரத்து 525 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை தென்காசி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த மாத்திரை மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை குறைபாடு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு மற்றும் படிப்பில்ஆர்வமின்மை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. வருகிற 19-ந் தேதி வரை முதல் கட்டமாகவும், 21-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் மாத்திரை வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சஞ்சீவினி ஓ.பி.டி.மருத்துவ ஆலோசனை திட்டம் பற்றிய விழிப்புணர்வும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் பொது மக்களுக்கு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி மூலமாக தகவல், கல்வி தொடர்பு பற்றிய நடமாடும் விழிப்புணர்வு வாகன ஊர்தியினையும் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இப்ராகிம் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story