கொரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்த திட்டம் கவர்னர் கிரண்பெடி தகவல்


கொரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்த திட்டம் கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2020 12:03 AM GMT (Updated: 15 Sep 2020 12:03 AM GMT)

புதுவையில் கொரோனா பரிசோதனையை 5 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் தற்போது தினந்தோறும் 4 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அதுவிரைவில் 5 ஆயிரமாக உயர்த்தப்படும். சோதனைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு சுழற்சிமுறையில் விடுமுறை அளிக்கவேண்டும்.

அந்த விடுமுறை காலத்தில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் குழுவினர் பணியில் ஈடுபட வேண்டும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நகரப்பகுதியில் இருக்கும் குழுக்களை சேர்ந்தவர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும்.

கட்டுப்பாட்டு பகுதிகள் கோவிட் வார் ரூம் மூலம் கண்காணிக்கப்பட்டு அதுகுறித்த அறிக்கையை தயார் செய்யவேண்டும். வீட்டு கண்காணிப்பில் இருந்து விதிகளை மீறியவர்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

வீடுதோறும் கண்காணிப்பு பணிக்கு செல்லும் சுகாதார ஊழியர்கள், தன்னார்வலர்கள் கொரோனா அறிகுறி உள்ளவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல பரிந்துரைத்து சிலிப்புகள் வழங்கவேண்டும். நடமாடும் வாகனங்களின் கொரோனா பரிசோதனை தொடர்பாக 2 அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். சோதனை கருவிகள், மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story