ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது


ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Sep 2020 12:22 AM GMT (Updated: 15 Sep 2020 12:22 AM GMT)

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ‘ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்க போவதாகவும், தற்போது தான் ஈரோடு மாவட்டம் துடுப்பதியில் இருப்பதாகவும், உடனே வந்து தன்னை பார்க்காவிட்டால் சங்கை அறுத்து விடுவேன் என்றும் பேசி மிரட்டி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சூரம்பட்டி போலீசார் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த செல்போன் எண் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்த கவுரி சங்கர் (வயது 36) என்பவருடையது என்பது தெரிய வந்தது. உடனே சூரம்பட்டி போலீசார் துடுப்பதிக்கு விரைந்து சென்று கவுரி சங்கரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கூலித்தொழிலாளி என்பதும், குடிபோதையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுரி சங்கரை கைது செய்தனர். பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கவுரி சங்கர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story