தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 Sep 2020 1:47 AM GMT (Updated: 15 Sep 2020 1:47 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் 3 போலீசார் உள்பட 47 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி மாரண்டஅள்ளியை சேர்ந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் பென்னாகரத்தை சேர்ந்த போலீஸ்காரர், அரூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்கள், டி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி, பாலக்கோடு பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

1,927 ஆக அதிகரிப்பு

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,927 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story