நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,462 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியை உள்பட 118 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,462 ஆக உயர்வு
x
தினத்தந்தி 15 Sep 2020 2:09 AM GMT (Updated: 15 Sep 2020 2:09 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆசிரியை உள்பட 118 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,462 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 3,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று ஆர்.புதுப்பாளையம் அரசு பள்ளி ஆசிரியை, பரமத்திவேலூர் போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர், திருச்செங்கோடு மற்றும் மல்லசமுத்திரம் போலீஸ்காரர்கள், சமூகநலத்துறை உதவியாளர் உள்பட 118 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரையில் நேற்று நாமக்கல்லில் 21 பேர், ராசிபுரத்தில் 17 பேர், திருச்செங்கோட்டில் 15 பேர், பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையத்தில் தலா 7 பேர், கொல்லிமலையில் 3 பேர், பள்ளிபாளையம், நெட்டுவம்பாளையம், வளையப்பட்டி, மல்லசமுத்திரம், காளிப்பட்டி, கரிச்சிபாளையம், பாண்டமங்கலம், குருக்கபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் தலா 2 பேர், புதன்சந்தை, வரகூர், சேந்தமங்கலம், எலச்சிபாளையம், சேலம், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 118 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

பாதிப்பு எண்ணிக்கை 3,462 ஆக உயர்வு

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,462 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 136 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,518 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 51 பேர் பலியான நிலையில், 893 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story