வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன? மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி


வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன? மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2020 10:45 PM GMT (Updated: 15 Sep 2020 6:24 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன? என்பது குறித்து மாநில துணை செயலாளர் சுதீஷ் பதில் அளித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வை தே.மு.தி.க. ஆதரித்தது. ஏனென்றால் நீட் தேர்வு மூலமாக மருத்துவ மாணவ- மாணவிகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். அதனால் நீட் தேர்வை ஆதரித்து வந்தோம். ஆனால், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தேர்வு நடத்துவதை தே.மு.தி.க. எதிர்க்கிறது.

தேசிய கல்விக்கொள்கை கொண்டு வருவது நல்லது தான். தே.மு.தி.க.வின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அண்மை மொழி கற்போம் என்பதுதான். தமிழகத்தை தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் தமிழர்களுக்கு மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும். அதன்பிறகு பார்க்கலாம். தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு என்ன? என்பதை டிசம்பர் மாதத்துக்குள் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story