சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு


சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sep 2020 12:53 AM GMT (Updated: 16 Sep 2020 12:53 AM GMT)

சிறுவன்-சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் ரகுபதி (வயது 23). இவர், புதுக்கோட்டையில் கேபிள் டி.வி. நடத்தும் ஒருவரிடம் வேலை பார்த்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் டி.வி.யில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை வயர் எடுத்துவரும் படி கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி கேபிள் வயர் எடுத்து கொடுக்கும் போது, ரகுபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி அங்கிருந்த ஓடிவிட்டார். பின் அந்த வீட்டில் இருந்த 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் சிறுவன் பயத்தால் சத்தம் போட்டுள்ளான். சிறுவனின் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்துள்ளனர். இதைப்பார்த்த ரகுபதி அங்கிருந்து தப்பி ஓட முயன்ற போது, அங்கிருந்தவர்கள் ரகுபதியை பிடித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

7 ஆண்டு சிறை தண்டணை

இதையடுத்து போலீசார் ரகுபதியை போக்சோ சட்டத்தில் கைது செய்து, புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து நீதிபதி டாக்டர்.சத்தியா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுவனை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

Next Story