சேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது 6 பேர் பலி


சேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது 6 பேர் பலி
x
தினத்தந்தி 16 Sep 2020 3:11 AM GMT (Updated: 16 Sep 2020 3:11 AM GMT)

சேலத்தில் ஒரே நாளில் 292 பேருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து, கொரோனாவின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 6 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 297 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 292 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

சேலம் ஒன்றியம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், சங்ககிரியில் 9 பேர், ஓமலூரில் 8 பேர், பனமரத்துப்பட்டியில் 5 பேர், மேட்டூர், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், எடப்பாடி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், கொங்கணாபுரம், மேச்சேரி, ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், காடையாம்பட்டி, கொளத்தூர், தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

15 ஆயிரத்தை தாண்டியது

மேலும் நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா 2 பேர், விழுப்புரம், திருச்சி, கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சேலம் வந்த தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 66 ஆக உயர்ந்துள்ளது.

6 பேர் பலி

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கபட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுதவிர 61 வயதுடைய முதியவர், 44 மற்றும் 55 வயதுடைய பெண்கள், 72 வயதுடைய முதியவர் ஆகிய 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 166 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story