விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது


விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sep 2020 3:19 AM GMT (Updated: 16 Sep 2020 3:19 AM GMT)

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி,

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம் ராயனம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற உள்ளது.

விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்காக ஒருவருடைய நிலத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

62 பேர் கைது

போராட்டத்துக்காக முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி தலைமையில் விவசாய சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோரும் அப்பகுதியில் கூடினர். ஆனால் காத்திருப்பு போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பு, சங்ககிரி துணை சூப்பிரண்டு ரமேஷ், கொங்கணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி உள்பட 62 பேரை கைது செய்து வேனில் ஏற்றி கொங்கணாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story