இளைஞர் பாசறைக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்து ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ தச்சை கணேசராஜா பேச்சு


இளைஞர் பாசறைக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்து ‘அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ தச்சை கணேசராஜா பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2020 10:30 PM GMT (Updated: 16 Sep 2020 7:15 PM GMT)

இளைஞர் பாசறைக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தெரிவித்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நாங்குநேரி, அம்பை சட்டமன்ற தொகுதிகளுக்கு காலை 11 மணிக்கும், நெல்லை, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகளுக்கு மாலை 6 மணிக்கும் நடந்தது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அவர் பாசறை உறுப்பினர் படிவம் வழங்கி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் எவ்வாறு பாசறைக்கு நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணியாற்ற எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது அ.தி.மு.க. பேரியக்கம். இந்த இயக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்டி காத்து வருகிறார்கள். அ.தி.மு.க.வில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை சேர்க்க வேண்டும்.

8 மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் முதன் முறையாக தேர்தல் பணியை அ.தி.மு.க.தான் தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் அம்பை ஆகிய ஐந்து தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா 25 பேர் கொண்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை குழுவை அமைக்க வேண்டும். உறுப்பினர்களை அதிகமாக சேர்த்து அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் செவல் முத்துசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, இலக்கிய அணி கூனியூர் மாடசாமி, பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை தலைவர் தேவா காபிரியல் ராஜன், எஸ்.கே.எம்.சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், காலை 11 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story