வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு பாவம் செய்து விட்டது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கு


வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு பாவம் செய்து விட்டது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 16 Sep 2020 11:11 PM GMT (Updated: 16 Sep 2020 11:11 PM GMT)

வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு மிகப்பெரிய பாவம் செய்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

மும்பை,

நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கும் மராட்டிய விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசின் முடிவுக்கு மராட்டியத்தை சேர்ந்த கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித்பவார் மும்பையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெங்காய விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து வந்த வேளையில் ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு எடுத்த முடிவு முற்றிலும் தவறானது. இது மத்திய அரசு விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய பாவம். ஏற்கனவே கொரோனா பிரச்சினையால் வெங்காய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் வெங்காய ஏற்றுமதி தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவை திரும்ப பெறுமாறு எங்களது கட்சியின் தலைவர் சரத்பவார் மத்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயலை வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறியதாவது:-

மராட்டிய விவசாயிகள் ஏற்கனவே கொரோனா பிரச்சினை, மழை வெள்ளம், புயல் போன்றவற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு உதவி வருகிறது. ஆனால் மத்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு முடிவு செய்து இருப்பதால், வெங்காய விலை டன்னுக்கு ரூ.700 முதல் ரூ.800 வரை வீழ்ச்சி அடைந்து உள்ளது. விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு நியாயம் கேட்டு காங்கிரஸ் போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் மத்திய அரசின் முடிவை கண்டித்து போராட்டம் நடத்தியது. இதில் புனேயில் கலெக்டர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய விவசாயிகள் வெங்காய மாலைகள் அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விவசாயிகளுக்கு எதிரான வெங்காய ஏற்றுமதி தடையை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Next Story