தமிழகத்தில் இதுவரை 67 ஆயிரத்து 846 முதியோருக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இதுவரை 67 ஆயிரத்து 846 முதியோருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 17 Sep 2020 2:13 AM GMT (Updated: 17 Sep 2020 2:13 AM GMT)

தமிழகத்தில் இதுவரை 67 ஆயிரத்து 846 முதியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரசவத்துக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,489 ஆண்கள், 2,163 பெண்கள் என மொத்தம் 5,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 7 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 689 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 983 பேரும், கோவையில் 549 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 27 பேரும், பெரம்பலூரில் 16 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 59 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 327 ஆண்களும், 2 லட்சத்து 6 ஆயிரத்து 504 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 22 ஆயிரத்து 218 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 67 ஆயிரத்து 846 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

57 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 34 பேரும், தனியார் மருத்துவமனையில் 23 பேரும் என 57 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் நெல்லையை சேர்ந்த 30 வயது இளம் பெண் குழந்தை பிறந்த சில நாட்களில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 11-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேற்று உயிரிழந்தவர்களில், சென்னையில் 14 பேரும், திருவண்ணாமலை, சேலம், கடலூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில் தலா 4 பேரும், திருச்சி, திருப்பத்தூர், தேனி, தஞ்சாவூரில் தலா இருவரும், தர்மபுரி, ஈரோடு, காஞ்சீபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், தென்காசி, நெல்லை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 19 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 8 ஆயிரத்து 559 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

5 ஆயிரத்து 768 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 768 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,029 பேரும், கோவையில் 707 பேரும், கடலூரில் 400 பேரும் அடங்குவர். இதுவரையில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 46 ஆயிரத்து 633 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 904 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 227 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 517 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story