சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 18 Sep 2020 12:15 AM GMT (Updated: 18 Sep 2020 12:15 AM GMT)

சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் நியூகுமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அந்த பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். இவருடைய மகள் பூங்கொடி (வயது 34). இவருக்கும் திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்த சிவசக்தி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமணமான 3 ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பூங்கொடி தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பூங்கொடியின் பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். அவரது தம்பி கடைக்கு சென்று விட்டார். மகள் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தார்.

பின்னர் வீட்டுக்கு சென்ற பூங்கொடியின் மகள் தனது தாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். அவருடைய அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து அவரது தம்பி மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்மஞ்சேரி போலீசார் பூங்கொடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து கணவரை பிரிந்து வாழும் விரக்தியில் பூங்கொடி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story