திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டு வேலைக்கார பெண்ணுடன் உல்லாசம்; என்ஜினீயர் மீது வழக்கு


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டு வேலைக்கார பெண்ணுடன் உல்லாசம்; என்ஜினீயர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Sep 2020 1:31 AM GMT (Updated: 18 Sep 2020 1:31 AM GMT)

திருமணம் செய்து கொள்வதாக கூறி, வீட்டு வேலைக்காரியுடன் உல்லாசமாக இருந்த பட்டதாரி வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் ரமேஷ் (வயது 26). இவர், என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் வீட்டு வேலைகளை செய்துவருகிறார். அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

கடந்த 2 மாதத்துக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைகளை முடித்து விட்டு, அந்த பெண் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அந்த பெண்ணை வழிமறித்த ரமேஷ், தனது வீட்டை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி, அவரை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

உல்லாசம்

பின்னர், அந்த பெண் மீது ஆசைகொண்டு, ‘உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்‘ என வாக்குறுதி கொடுத்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகு, அவர் வீட்டு வேலை செய்ய வரும்போது, 2 முறை அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், ரமேஷிடம் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார். ஆனால், ரமேஷ் திருமணத்திற்கு மறுத்து அந்த பெண்ணை ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி அந்த பெண், ரமேசின் தந்தையிடம் முறையிட்டுள்ளார்.

தந்தை-மகன் மீது வழக்கு

இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த மூக்கன், அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று அச்சுறுத்தும் வகையில் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 417 (திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்து உடலுறவு கொள்ளுதல்), பிரிவு 506 (1) எச்சரித்து மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரமேஷ் மற்றும் அவருடைய தந்தை மூக்கன் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேதவல்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story