தென்தாமரைகுளத்தில் துணிகரம் அம்மன் கோவிலில் 17 பவுன் நகை கொள்ளை


தென்தாமரைகுளத்தில் துணிகரம் அம்மன் கோவிலில் 17 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 18 Sep 2020 2:53 AM GMT (Updated: 18 Sep 2020 2:53 AM GMT)

தென்தாமரைகுளத்தில் அம்மன்கோவில் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

தென்தாமரைகுளத்தில் இந்து நாடார் சமுதாயத்துக்கு சொந்தமான பெரியம்மன் கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அந்த பகுதியில் தனித்தனி இடத்தில் அமைந்துள்ளது. இதில் பெரியம்மன் கோவில் 150 வருட பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில்களுக்கு சொந்தமாக தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள ஒரு லாக்கரில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெரியம்மன் கோவிலில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடை திறக்கப்பட்டு அதிகாலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இரவு பூஜை முடிந்தவுடன் கோவில் நடை சாத்தப்படும். பின்னர், மீண்டும் அடுத்த வாரம் திங்கட்கிழமை கோவில் நடை திறப்பது வழக்கம். மற்ற நாட்களில் சாமி தரிசனம் செய்வோர் வெளிப்பகுதியில் இருந்து தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

பூட்டு உடைக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை தென்தாமரைகுளத்தை சேர்ந்த தொழிலாளியான கோபிதுரை பெரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அவர் கோவில் கருவறையை சுற்றி வரும்போது கருவறையின் பக்கவாட்டில் உள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது. பின்னர் இதுபற்றி ஊர்தலைவர் துரைலிங்கம் தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜ், ஜாண்கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.

17 பவுன் நகைகள் கொள்ளை

அப்போது, பெரியம்மன் சிலையில் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க சங்கிலி மற்றும் தலையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்கத்திலான பிறை, வெள்ளி கொலுசுகள், வெள்ளி காப்புகள், வெள்ளிதட்டு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 17 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

கோவிலின் வெளிப்பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

பரபரப்பு

அதே சமயத்தில், தடயங்களை சேகரிக்க கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் சல்லடை போட்டு தேடினர். அப்போது, கோவிலின் பின்புறத்தில் ஒரு செல்போன், பழைய வெள்ளி காப்புகள் ஆகியவற்றை கண்டெடுத்தனர். அம்மன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் வெள்ளி காப்பு பழமையானது என்பதால் அதில் சில கருப்பு நிறத்தில் இருந்துள்ளது. அதனால், கொள்ளையர்கள் கருப்பு நிறத்தில் இருந்தவற்றை அந்த பகுதியில் வீசி உள்ளனர். அவர்கள், தப்பிச் செல்லும் போது செல்போனையும் தவற விட்டது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்கள் கோவிலில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கோவிலின் அருகில் உள்ள தனியார் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். நள்ளிரவில் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து 17 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story