நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 112 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,786 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 112 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,786 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 Sep 2020 4:13 AM GMT (Updated: 18 Sep 2020 4:13 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பெண் டாக்டர் உள்பட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,786 ஆக உயர்ந்து உள்ளது.

நாமக்கல்,

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 3,673 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,674 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று புதுச்சத்திரம் பொதுப்பணித்துறை உதவி என்ஜினீயர், நாமக்கல் ஆயுதப்படை போலீஸ்காரர், பள்ளிபாளையம் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய பெண் டாக்டர், நாமக்கல் கால்நடை கல்லூரி பேராசிரியை உள்பட 120 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. வழக்கம்போல் நேற்றும் நாமக்கல், பரமத்திவேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.

பாதிப்பு எண்ணிக்கை 3,786 ஆக உயர்வு

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,786 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 80 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,778 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 55 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 953 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story