பிரதமர் மோடி பிறந்த நாள் விழா


பிரதமர் மோடி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 18 Sep 2020 10:00 PM GMT (Updated: 18 Sep 2020 8:28 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி,

தென்காசியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி மாவட்ட பா.ஜ.க. வக்கீல் அணி சார்பில் காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு மாவட்ட துணை தலைவர் வக்கீல் சண்முகவேல் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி, மத்திய அரசு வக்கீல் முருகேசன் மற்றும் வக்கீல்கள் நீலகண்டன், காத்த பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி நகர பா.ஜ.க. சார்பில் கற்பக விநாயகர் கோவிலில் ஆயுள் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள், பென்சில்கள், நோட்டுகள் மற்றும் கட்சியின் விளக்க உரை கையேடு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம் பா.ஜ.க. சார்பில் குற்றாலநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பா.ஜ.க. கொடி சன்னதி பஜார் மற்றும் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு தென்காசி ஒன்றிய துணைத் தலைவர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ் கட்சி கொடியேற்றி வைத்தார். மாவட்ட இளைஞரணி பொது செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி நகர மற்றும் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய கட்சியின் சார்பில் நகரபஞ்சாயத்து, தனியார் பஞ்சாயத்து வளாகம், தனியார் பள்ளி, அரசு ஆஸ்பத்திரி, சிவகிரி அருகே வடக்கு சத்திரம், தேவிபட்டணம், தட்டாங்குளம் காளியம்மன் கோவில் வளாகம் போன்ற பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். நகர தலைவர் தங்கம், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் இசக்கிமுத்து, ஒன்றிய பொதுச் செயலாளர் மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Next Story