சாத்தூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் படுகொலை - தொழிலாளி வெறிச்செயல்


சாத்தூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் படுகொலை - தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 18 Sep 2020 10:15 PM GMT (Updated: 19 Sep 2020 4:27 AM GMT)

சாத்தூர் அருகே ம.தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 49). இவர் அந்த பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வந்தார். இவர் ம.தி.மு.க.வில் மாநில குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவர். இவருக்கு கோமதி (45) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த அய்யலுசாமி என்பவருடைய மகன் மாரிமுத்து (21). விறகு வெட்டும் தொழிலாளியான இவர், இரவு நேரங்களில் சிலருடன் சேர்ந்து, ம.தி.மு.க. பிரமுகர் சிவகுமார் வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் மதுகுடித்து, அக்கம்பக்கத்தினரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை சிவகுமார் கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும் மது அருந்தி தகராறில் ஈடுபட்ட மாரிமுத்துவை, சிவகுமார் மீண்டும் கண்டித்து எச்சரித்துள்ளார். பின்னர் சிவகுமார் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மாரிமுத்து, அரிவாளால் சிவகுமாரை சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது.

இதில் சிவகுமார் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மாரிமுத்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் டவுன் போலீசார், சிவகுமாரின் உடலை பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மாரிமுத்துவை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தேடினர். அப்போது, மாரிமுத்துவின் செல்போன் சிக்னல் சாத்தூர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படையினர் விரைந்து சென்று நேற்று அதிகாலை சுற்றி வளைத்து மடக்கி மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story