திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 4 பேர் பலி


திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனாவுக்கு 4 பேர் பலி
x
தினத்தந்தி 19 Sep 2020 6:15 AM GMT (Updated: 19 Sep 2020 5:58 AM GMT)

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

தேனி, 

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 225 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேனி நக்கீரர் தெருவைச் சேர்ந்த 49 வயது ஆண், சின்னமனூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த 58 வயது ஆண், ஆண்டிப்பட்டி மணியக்காரன்பட்டியை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தேனி மாவட்டத்தில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 112 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரேநாளில் 104 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே 152 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டியை சேர்ந்த 66 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதனால் கொரோனாவால் இறந்தவர் களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே நேற்று 25 பெண்கள், 18 முதியவர்கள் உள்பட மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை, சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 227 ஆக உயர்ந்தது. அதேநேரம் 45 பெண்கள் உள்பட 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 444 ஆக அதிகரித்தது.

Next Story