புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Sep 2020 2:57 AM GMT (Updated: 20 Sep 2020 2:57 AM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி,

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அதிகாலை முதலே பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

தர்மபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையொட்டி சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சென்னகேசவ பெருமாள் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தங்க கவசம்

தர்மபுரியை அடுத்த அளேதர்மபுரி வரதகுப்பம் வெங்கட்ரமண சாமி கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். செட்டிக்கரை சென்றாயபெருமாள் சாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோன்று மூக்கனூர் அக்கமனஅள்ளியில் உள்ள ஆதிமூல வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சாமிக்கு தங்க கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

லட்சுமி நாராயணசாமி

தர்மபுரியை அடுத்த அதகபாடியில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் உற்சவருக்கு சிறப்பு ஆராதனையும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாலக்கோடு அருகே உள்ள பேடரஅள்ளி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மணியம்பாடி வெங்கட்ரமணசாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோன்று பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போடுவராய பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணா பிருந்தாவனம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை செய்து வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரூர்-காரிமங்கலம்

அரூர் கரிய பெருமாள் கோவில், சந்தை மேட்டில் உள்ள பெருமாள் கோவில், கோபிநாதம்பட்டி பெருமாள் கோவில், ஒடசல்பட்டி, தீர்த்தமலை ஆகிய பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அரூர் பகுதியில் பல பெருமாள் கோவில்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் வெளியிலிருந்தே சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலம் லட்சுமி நாராயசாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதேபோல் கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவிலிலும் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story