சேலத்தில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை


சேலத்தில் பரபரப்பு 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Sep 2020 3:44 AM GMT (Updated: 20 Sep 2020 3:44 AM GMT)

சேலத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்,

சேலம் பெரமனூர் ராஜாஜி ரோட்டில் 4 மாடிகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம். இவர் அதே பகுதியில் கதவு மற்றும் ஜன்னல்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி வித்தேஸ்வரி (வயது 39). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சண்முகசுந்தரம் நேற்று காலை வழக்கம்போல் சைக்கிளில் சென்று விட்டார். இவர் சென்ற சிறிது நேரத்தில் வித்தேஸ்வரியும் எழுந்து மொட்டை மாடியாக உள்ள 4-வது மாடிக்கு சென்றார். பின்னர் அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த வித்தேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

மன அழுத்தம்

இந்த சத்தத்தை கேட்டு குடியிருப்பில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது வித்தேஸ்வரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் வித்தேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வித்தேஸ்வரி மனஅழுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

வைரலாகும் வீடியோ

இதற்கிடையில் அந்த குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வித்தேஸ்வரி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங் களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வித்தேஸ்வரி தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story