கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு: மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது


கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறு: மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2020 11:00 AM GMT (Updated: 20 Sep 2020 10:56 AM GMT)

மதுரையில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஏற்பட்ட தகராறில் மனைவியை உயிரோடு எரித்து கொள்ள முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 

மதுரை மதிச்சியம் ஆர்.ஆர்.மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹரிசுரேஷ்(வயது 22) கூலி தொழிலாளி. இவருக்கும் கருப்பாயூரணி ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகள் கற்பகவள்ளிக்கும்(18) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முதலில் இவர்கள் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் மதிச்சியம் பகுதியில் தனியாக வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தனர்.

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக ஹரிசுரேஷ் வேலைக்கு சரியாக செல்லவில்லை. ஆனால் அவர் அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் கற்பகவள்ளி கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பெற்றோர் சமாதானம் செய்து மறுபடியும் கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஹரிசுரேஷ் திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த பணத்தை எல்லாம் செலவு செய்தும், நகைகளை அடகு வைத்தும் குடும்பம் நடத்தி உள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணையாக நகை கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளார். இதை அறிந்த கற்பகவள்ளியின் தந்தை தீபாவளி முடிந்த உடன் நகையை கொடுப்பதாக கூறியுள்ளார். சம்பவத்தன்று மது போதையில் ஹரிசுரேஷ் வீட்டிற்கு வந்து மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கினார். அப்போது அவர் தந்தை வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிசுரேஷ் அருகில் இருந்த மண்எண்ணெயை எடுத்து கற்பகவள்ளி மீது ஊற்றினார். உடனே அவர் வீட்டில் இருந்து தப்பி செல்ல முயன்ற போது அவர் மீது நெருப்பை பற்ற வைத்து எரித்துள்ளார். உடலில் தீப்பற்றியதால் அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்தனர். அவர்கள் அவரை காப்பாற்றி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிருக்கு போராடி வரும் கற்பகவள்ளிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கற்பகவள்ளியின் தந்தை மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மனைவியை கொலை செய்ய முயன்ற ஹரிசுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

திருமணமான 5 மாதத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story