வேலூர் மாவட்டத்தில், வேளாண்மைத்துறை ஊழியர் உள்பட 121 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 13,438 ஆக உயர்வு


வேலூர் மாவட்டத்தில், வேளாண்மைத்துறை ஊழியர் உள்பட 121 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 13,438 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Sep 2020 12:45 PM GMT (Updated: 20 Sep 2020 1:31 PM GMT)

வேளாண்மைத்துறை ஊழியர் உள்பட 121 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,438 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர், 

வேலூர் தொரப்பாடியில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

வேலூர் நகரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரியும் சைதாப்பேட்டையை சேர்ந்த ஊழியர் ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டார்.

கஸ்பாவில் வீட்டில் இருந்தபடி பணிபுரியும் 2 தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த சிலருக்கும் தொற்று உறுதியானது.

அதைத்தவிர வேலூர் தென்றல் நகரில் 7 வயது சிறுமி, தொரப்பாடியில் 8 வயது சிறுமி, வள்ளலார் டபுள் ரோட்டில் 80 வயது முதியவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வேலூரை சேர்ந்த 2 பேர், குடியாத்தத்தில் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பொறியாளர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தொற்று பாதித்த 121 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை வேலூர் மாவட்டத்தில் 13,438 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12,253 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story