பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலி - கர்ப்பிணிகள் உள்பட 289 பேருக்கு தொற்று உறுதி


பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேர் கொரோனாவுக்கு பலி - கர்ப்பிணிகள் உள்பட 289 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 20 Sep 2020 3:00 PM GMT (Updated: 20 Sep 2020 2:43 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பரங்கிப்பேட்டையை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். கர்ப்பிணிகள் உள்பட 289 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 549 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 289 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் கடலூர், அண்ணாகிராமத்தை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கடலூரை சேர்ந்த பிரசவித்த தாய், சென்னையில் இருந்து கடலூர் வந்த ஒருவர், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 108 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 177 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 838 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 306 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இது வரை 15 ஆயிரத்து 387 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு நேற்று முன்தினம் வரை 188 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதன் விவரம் வருமாறு:-

பரங்கிப்பேட்டையை சேர்ந்த 73 வயது முதியவர் மேல்மருவத்தூர் மருத்துவமனையிலும், 80 வயது முதியவர் வடபழனி தனியார் மருத்துவமனையிலும், 55 வயது ஆண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 191 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதித்த 2059 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 201 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 1518 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

Next Story