ஈரோடு மாவட்டத்தில் 148 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்வு


ஈரோடு மாவட்டத்தில் 148 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி - சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Sep 2020 11:00 PM GMT (Updated: 20 Sep 2020 6:07 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 427 ஆக உயர்ந்தது.

இதில் ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட திண்டல், கருங்கல்பாளையம், சூரம்பட்டிவலசு, கொல்லம்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், சாஸ்திரிநகர், மாணிக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று ஒரே நாளில் 122 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 281 பேர் குணமடைந்து உள்ளார்கள். 1,076 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவுக்கு மாவட்டத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியானார்கள். இதில் பவானியை சேர்ந்த 59 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 18-ந் தேதி இறந்தார்.

மேலும், ஈரோடு ஆர்.என்.புதூரை சேர்ந்த 68 வயது முதியவர் தனியார் ஆஸ்பத்திரியிலும், கருங்கல்பாளையத்தை சேர்ந்த 74 வயது முதியவர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

Next Story