கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேர வாய்ப்பு


கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு: கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையை வந்தடைந்தது பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேர வாய்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 12:22 AM GMT (Updated: 21 Sep 2020 12:22 AM GMT)

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். கோடைக்காலங்களில் இந்த ஏரிகள் வற்றி விடுவதால் சென்னையில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போதைய ஆந்திர முதல்-மந்திரி என்.டி.ராமாராவுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி முதல் இவ்வாண்டு ஜூன் 24-ந் தேதி வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் சாதனை அளவாக 8.060 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர் வரத்து இல்லாததால் பூண்டி ஏரி வறண்டது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் தொடர்ந்து ஆந்திர அரசு அதிகாரிகளை வலியுறுத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த 14-ந் தேதியன்று கிருஷ்ணா தண்ணீீர் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் உறுதி அளித்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆந்திர அரசு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நீர் திறக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 18-ந் தேதியன்று கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்படுகிறது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு நேற்று இரவு 8 மணிக்கு வந்தடைந்தது. தமிழக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் ஹென்றி ஜார்ஜ், உதவி செயற்பொறியாளர் சண்முக சுந்தரம், உதவி பொறியாளர்கள் பிரதீஷ், சதீஷ், பழனிகுமார், பரத், பவித்ரன் மற்றும் ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்சுராயமய்யா, ஓபுல்தாஸ் ஆகியோர் சிறப்பு பூஜைகள் நடத்தி மலர் தூவி கிருஷ்ணா நதிநீரை வரவேற்றனர். முதலில் வினாடிக்கு 30 கனஅடி தண்ணீீர் வந்து கொண்டிருக்கிறது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.

இந்தநீர் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று(திங்கட்கிழமை) வந்து சேரும் என்று தெரிகிறது. கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால் வறண்டு கிடந்த பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

Next Story