தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவிலில் 90 சதவீத பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன


தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன் கோவிலில் 90 சதவீத பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன
x
தினத்தந்தி 21 Sep 2020 1:31 AM GMT (Updated: 21 Sep 2020 1:31 AM GMT)

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்ட ஆதிமாரியம்மன கோவிலில் 90 சதவீத பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. தற்கொலைக்கு முயன்றதாக இந்து முன்னணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தஞ்சாவூர்,

நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததன் அடிப்படையில் தஞ்சை-நாகை சாலையில் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிக்கும் பணி 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. புளியந்தோப்பு கிராமத்தில் 70 வீடுகள் அகற்றப்பட்டன. ஆதிமாரியம்மன்கோவிலை இடிக்க பொதுப்பணித்துறையினர் முயற்சி செய்தபோது, கோவில் நிர்வாகத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் இடைக்கால தடை பெற்றனர்.

இதை எதிர்த்து பொதுப்பணித்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தபோது 10 வாரங்களுக்குள் கோவிலை இடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நேற்றுமுன்தினம் கோவிலை இடிக்கும் பணி தொடங்கியது. இதை அறிந்த இந்து முன்னணியினர் விரைந்து வந்து போராட்டம் நடத்தினர். இதனால் கோவில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

கூடுதல் போலீசார்

2-வது நாளான நேற்று கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இரும்பு தடுப்புகளை அமைத்து வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிக்குள் நுழையாதபடி போலீசார் கண்காணித்தனர். பின்னர் பொக்லின் எந்திரங்களை கொண்டு கோவிலை இடிக்கும் பணி துரிதமாக நடைபெற்றது.

கோவிலில் மண்டபம், சன்னதி கோபுரங்கள் எல்லாம் இடிக்கப்பட்டன. 90 சதவீத பணி நிறைவடைந்தது. சிவலிங்க வடிவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராஜகோபுரத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. இரவு நேரமாகிவிட்டதால் கோவிலை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இன்று(திங்கட்கிழமை) கோவில் முழுமையாக இடிக்கப்பட்டு விடும் எனவும், அருண்மொழிப்பேட்டையில் 20 ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

வழக்கு

முன்னதாக கோவிலை இடிக்கக்கூடாது என நேற்றுமுன்தினம் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், திடீரென கோவில் முகப்பில் ராஜகோபுர வடிவில் உள்ள சிவலிங்கத்தின் மீது ஏறினார். அப்போது அவர், கோவிலை இடிக்கக்கூடாது எனவும், கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும், மீறி இடித்தால் தற்கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை செய்து தற்கொலைக்கு முயன்றதாக முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story