வேளாண்மை சட்ட திருத்தத்துக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நாகையில் முத்தரசன் பேட்டி


வேளாண்மை சட்ட திருத்தத்துக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நாகையில் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2020 1:47 AM GMT (Updated: 21 Sep 2020 1:47 AM GMT)

வேளாண்மை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என்று நாகையில் முத்தரசன் கூறினார்.

நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு எதிராக பல சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அதில் ஒன்று விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்ட திருத்தம். இந்த சட்டத்தை அனைத்து கட்சிகளும் எதிர்த்தும் தங்களிடம் உள்ள பெரும்பான்மை பலத்தை கொண்டு மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்தால் நமது நாட்டில் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிராக பொய் சொல்கிறார். இந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நீண்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார். மத்திய அரசு எதை செய்தாலும் அதை ஆதரிப்பது தான் தமிழக முதல்- அமைச்சரின் வேலையாக உள்ளது.

விவசாயிகளுக்கு எதிரான சட்டம்

சட்டத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்க மாட்டார்கள் என்று முதல்- அமைச்சர் கூறுகிறார். நீட் தேர்வு வேண்டாம் என்றால் தமிழக அரசு அதற்கு ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை. உற்பத்தி செய்யும் பொருளை விவசாயிகள் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை செய்த மறு நிமிடமே விற்பனை செய்து விடுவார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இருப்பு வைத்து கொண்டு கூடுதல் விலை வந்தவுடன் விற்பனை செய்யும். உற்பத்தி செய்த பொருளை எங்கும் விற்பனை செய்யலாம் என்று கூறப்படுகிறது. சிறு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தங்கள் மாவட்டத்திலேயே விற்பனை செய்வதை விட்டு வேறு ஒரு மாநிலத்துக்கு எடுத்து சென்று எப்படி விற்பனை செய்வார்கள். இந்த சட்டம் விவசாயிகளுக்கு முற்றிலும் எதிரான சட்டம். இந்த சட்டத்தை இந்தியாவில் ஆதரிக்கும் ஒரே விவசாயி தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்.

போராட்டம்

மேலவையில் இந்த சட்டத்தை எதிர்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் வேளாண்மை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும். மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டு வேளாண்மை சட்ட திருத்த மசோதா குறித்து விவாதம் செய்ய உள்ளோம். தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணி பலமாக உள்ளது. வருகிற சட்ட சபை தேர்தலில் எங்கள் பலத்தை நிரூபிப்போம். இவர் அவர் கூறினார்.

Next Story