வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் தங்கமணி பேட்டி


வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 21 Sep 2020 2:22 AM GMT (Updated: 21 Sep 2020 2:22 AM GMT)

வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாம்பாளையம், கொக்கராயன்பேட்டை வன்னம்பாறை, களியனூர், களியனூர் அக்ரகாரம், மோடமங்கலம் ஆகிய பகுதிகளில் புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அலமேடு பகுதியில் இறகுபந்து மைதானம் கட்ட நடந்த பூமி பூஜையிலும் அமைச்சர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரன், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணி, தாசில்தார் தங்கம், வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, ஆலம்பாளையம் அ.தி.மு.க. செயலாளர் தனசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மின் இணைப்புகள்

இதைத்தொடர்ந்து குமாரபாளையம் நகரில் காவேரி நகர் பகுதியில் அம்மா உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். அதன்பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்-அமைச்சர் தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதில் ஏற்கனவே பதிவு செய்த 25 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், கூடுதலாக தட்கல் திட்டத்தில் பதிவு செய்யும் 25 ஆயிரம் பேர் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும். இவை அக்டோபர் 31-ந் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்படும்.

எதிர்க்கட்சிகள்

தமிழகத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் உள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. எவ்வளவு தேவை என்றாலும் மின்சாரத்தை பெற்று தருவதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும் என்பதோ அல்லது விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற பேச்சுக்கோ இடமில்லை. ஆகையால் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை திருத்த சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை. எதிர்க்கட்சிகள் எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story