மல்லூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது திடுக்கிடும் தகவல்கள்


மல்லூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 21 Sep 2020 2:25 AM GMT (Updated: 21 Sep 2020 2:25 AM GMT)

மல்லூர் அருகே மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பனமரத்துப்பட்டி,

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஆராங்கல்திட்டு என்ற பகுதியில் கடந்த 17-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி ஒருவர் கற்பழிக்கப்பட்டு, அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி வைத்திருந்த செல்போன், அணிந்திருந்த நகை ஆகியவற்றையும் மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் கொலையாளிகளை பிடிக்க ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களும் மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் மூதாட்டி கொலை தொடர்பாக ஓமலூர் அருகே கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த நரேஷ்குமார் (வயது 22) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

கொடுவாள் வெட்டு

கைதான நரேஷ்குமார் மீது அடிதடி, செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஓமலூர், மேச்சேரி, ஓசூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளன. அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். மேலும் நரேஷ்குமார் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டிகளை நோட்டமிட்டு அவர் களை மிரட்டி நகைப்பறிப்பு, பாலியல் சீண்டல்களை அரங்கேற்றி வந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காலை ஓமலூரில் இருந்து பஸ்சில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதிக்கு வந்த அவர் சிறிது தூரம் நடந்து சென்றார். ஆராங்கல்திட்டு பகுதிக்கு சென்றதும் அங்கு ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை நோட்டமிட்டார். பின்னர் மூதாட்டியின் வீட்டுக்கு சென்று அவரை மிரட்டி பணம், நகைகளை கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே, மூதாட்டியை கொடுவாளால் வெட்டினார். பின்னர் மூதாட்டி தப்பி ஓடியபோது விரட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் வைத்திருந்த செல்போன், தோடு உள்ளிட்டவைகளை எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரிசோதனை

இதையடுத்து கைது செய்யப்பட்ட நரேஷ்குமாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவரை கைது செய்த போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story