குலசேகரன்பட்டினம் “தசரா விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்படும்” ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


குலசேகரன்பட்டினம் “தசரா விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்படும்” ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 21 Sep 2020 10:45 PM GMT (Updated: 21 Sep 2020 6:33 PM GMT)

“குலசேகரன்பட்டினம் தசரா விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்படும்“ என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

குலசேகரன்பட்டினம்,

இந்தியாவிலேயே கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாளில் காப்பு அவிழ்த்து, உண்டியலில் செலுத்துவார்கள்.

இந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவது என்றும், தொடர்ந்து 26-ந்தேதி சூரசம்ஹாரமும், 27-ந்தேதி காப்பு அவிழ்ப்பதுடன் விழாவை நிறைவு செய்து என்றும் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது கொரோனா தொற்று அபாயம் உள்ள சூழலில் தசரா திருவிழாவை பாதுகாப்புடன் நடத்துவது தொடர்பாக காவல்துறை சார்பில் தசரா குழுக்கள், இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை கூட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தசரா திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கான சூழலை காவல்துறை உருவாக்க வேண்டும், தசரா குழுவில் 10 முதல் 15 நபர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

சிவலூர் தசரா குழு நிர்வாகி முருகன் கூறும்போது, “தசரா குழுக்களில் இருந்து ஒரு நபர் மட்டுமே வந்து காப்பு கயிறுகளை வாங்கி செல்ல வேண்டும், ஏராளமான மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக்குழு மற்றும் நடமாடும் சுகாதார குழு அமைக்கப்பட வேண்டும். வெளியூர்களில் இருந்து தசரா திருவிழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்“ என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-

தசரா பக்தர்கள் குழுவினர், இந்து அமைப்பினர், உள்ளூர் மக்கள் கூறிய அனைத்து கருத்துகளும் கேட்கப்பட்டு உள்ளது. அவை அனைத்தும் மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவுகள் அறிவிக்கப்படும். உள்ளூர் மக்கள் தங்கள் அடையாள அட்டைகளுடன் ஊருக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். தசரா திருவிழாவை மக்கள் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் கொண்டாட அனைத்து வழிமுறைகளும் ஆராயப்பட்டு பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கணேசன், இந்து முன்னணி நகர தலைவர் சித்திரை பெருமாள், நகர செயலாளர் ஆத்திசெல்வன், இந்து மகாசபா மாநில செயலாளர் அய்யப்பன், தெற்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் ரவி, முன்னாள் அறங்காவலர் தலைவர் கண்ணன், குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவி சொர்ணப்பிரியா துரை, ஜெய் சிவசேனா மாநில செயலாளர் சசிகுமார் மற்றும் உதிரமாடன்குடியிருப்பு, வைத்தியலிங்கபுரம், பெரியதாழை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த தசரா குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story